Samstag, Oktober 16, 2004

மாற்ற விரும்பும் சம்பவம் - ரா.சுப்புலட்சுமி

தமிழ்ஓவியத்திலிருந்து

ரொம்ப சின்ன வயசுல நடந்துச்சு இந்த சம்பவம். எங்க பக்கத்து வீட்டுல ஒரு அழகான அக்கா இருந்துச்சு. பேரு.......சாந்தினு வைச்சுக்குவோம். ஒரு நா அந்த அக்கா என்ன கூப்பிட்டு, " உன் ப்ரண்டு நளினி இருக்கா இல்ல..அவ அண்ணன் சேகர் கிட்ட நான் குடுத்தேன்னு இந்த கடுதாச குடுக்கிறயா...உனக்கு ஆரஞ்சு மிட்டாய் கை நிறைய தர்றேன்"னு சொல்லிச்சு. எனக்கு ஆரஞ்சு மிட்டாய்னா அவ்ளோ உசுரு. நான் மண்டைய மண்டைய ஆட்டிக்கிட்டு கடுதாசு வாங்கின்னு ஒரே ஒட்டமா ஒடினேன்.

அப்பதான் நளினி வந்தா, "என்ன இவ்ளோ ஒட்டமா ஒடியாரே..என்ன உன் கையிலே"ன்னு கேட்டா. நான் "உன் அண்ணனுக்கு தான்...கடுதாசு..அந்த சாந்தி அக்கா குடுக்க சொல்லிச்சு..". அதுக்கு அவ, " நேத்துதான் என்கிட்ட ஒண்ணு தந்துச்சு அந்த அக்கா..அதுக்குள்ள இன்னுஓண்ணா..?". நாங்க பேசிகிட்டே இருக்கும்போது, அவ அம்மா வந்துட்டாங்க. " என்ன..கடுதாசுனு என்னமோ பேசிகிட்டு இருக்கே....என்னது அது...?" என் கையில் உள்ளதைப் பார்த்து கேட்டாங்க.

நானும் தெரியாத்தனமா, "சேகர் அண்ணனுக்குத்தான் அத்த, அந்த எருமட்டைகாரங்க வீட்டு சாந்தி அக்கா குடுக்கச் சொன்னங்க"னு சொல்லிட்டு அவங்க கிட்ட குடுத்தேன். வாங்கி படிச்சு பாத்துட்டு, " என்ன திமிருடி அவளுக்கு...? என்ன தெர்யமிருந்தா என் புள்ளைக்கே கடுதாசு குடுத்து மயக்குவா அவ ?...இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்க்கமா விட மாட்டேன்"னு வரிஞ்சு கிட்டு போனங்க.

O

சில வருடங்களுக்கு முன் சாந்தி அக்காளைப் பார்த்தேன். உடம்பெல்லாம் சுருங்கி தலையெல்லாம் நரைத்து அடையாளம் தெரியாமல் போயிருந்தாள். என்னை அடையாளம் தெரியவில்லை அவளுக்கு, நான் சொல்லி புரிய வைத்தவுடன், முகம் மலர சினேகத்துடன் சிரித்தாள்.

சேகருடனான அவளுடைய முதல் காதல் அன்று முறிந்தது. அவர் அம்மா போட்ட சண்டையால் அவமானம் தாங்க முடியாமல் அவர்கள் வீட்டை காலிச் செய்து வேறு ஊருக்கு போனார்கள். அவள் அப்பா உடனேயே சொந்தத்திலேயே ஒரு மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் முடித்து வைத்தார்.

"அது சரிப்பட்டு வரல்லே. அவருக்கு என்னை சுத்தமா புடிக்கல. ரெண்டாவது வருசமே என்னை விட்டு போய்ட்டார். நான் எருமட்டை வித்து, பஜ்ஜிப் போட்டு எங்க அப்பா அம்மா கூடவே காலத்தே ஓட்டிட்டேன்."

"சேகர் அண்ணன் எப்படியிருக்கார்...?"

"ஓ.....உனக்கு அப்ப விசயமே தெரியாதா....? எனக்கு கல்யாணம் முடிஞ்ச மறு நா, அவங்க வீட்டு உத்தரத்தில தொங்கிட்டு மவராசனா போய் சேர்ந்துட்டார்..... நாந்தான் பூமிக்கு பாரமா இன்னும் இருக்கேன்..."

பீறிட்டு வந்த கண்ணீரை அடக்க முடியவில்லை என்னால்.

நான் மட்டும் அன்று அந்த கடிதத்தை சேகர் அண்ணனிடமே கொடுத்து இருந்தால்...?

ரா.சுப்புலட்சுமி
நன்றி-தமிழ்ஓவியம்

Keine Kommentare: